Wednesday, November 24, 2010

அபத்த வாழ்வின் சூத்திரங்கள்!


வாழ்வில் தம்மை வெற்றி பெற்றுவிட்டதாக பாவனை புரிபவர்கள்

வெற்றியின் சூத்திரங்களை கற்று தேர்ந்துவிட்டதாக கருதிக் கொள்கிறார்கள்

தாமறிந்த சூத்திரங்களை அவர்கள் பிறருக்கு கற்பிப்பதேயில்லை

தாமாக கற்றுத் தேர்பவர்களை முன்னேற வழிவிடுவதுவுமில்லை

மாறாக அவர்களிடத்து ஒருவித கள்ளப்புன்னகை உதிர்க்கிறார்கள்

வெற்றியின் பீடம் நோக்கிய வழுக்குமரத்தில் பிடிகள் இறுகுகின்றன

அதில் ஒரு குறிப்பிட்ட தொலைவு முன்னேறிச் சென்றவுடன்

வாழ்வின் அத்துனை வெற்றிகளையும் அடைந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள்

அவர்களின் புன்னகை முகங்களில் இப்பொழுது மமதையின் கெக்களிப்பு

மேலே இருப்பது பீடங்களல்ல பீடம் மட்டுமேயென உறுதியடைந்ததும்

அவர்களுக்குள் விரைவாகப் பற்றிக் கொள்கிறது அதீத பதட்டமொன்று

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்கள் பத்திரப்படுத்தப்படுகின்றன

அவற்றை கீழே நிற்பவர்கள் புரிந்து கொள்ள விடப்படுவதேயில்லை

வேர் பற்ற விழைந்து பின் நம்பிக்கையிழந்து வெளியேறுபவர்களின்

பெருமூச்சு வெப்பக்காற்றில் இறுகுகின்றன வழுக்குமரத்தின் வேர்கள்

அவை வெறுப்பின் கசப்புறிஞ்சி பண வாசனையை பரவவிடுகின்றன

அவர்கள் தமது குழந்தைகள் புரிந்துகொள்ளும் வயதெட்டும் வரை

விரல்கள் கடுக்க பற்றியிருக்கிறார்கள் பளபளப்பேறிய அவ்வழுக்குமரத்தை

எதையும் ஒப்புக் கொடுப்பதென்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டிருக்கிறது

அபத்த வாழ்வின் வெற்றி சூத்திரங்களைக் கற்றுவிட்டதாக நினைப்பவர்கள்

கறந்த பாலின் வெம்மைக்கான காரணத்தை உணர்ந்திருக்கவில்லை

பிறந்த குழந்தையின் சிரிப்பை பொருட்படுத்துவதேயில்லை

உழைத்துக் களைத்தவனின் முகச்சுருக்கங்களை கவனிப்பதேயில்லை

பனித்துளியொன்றின் அழகிய கணங்களை அனுபவிப்பதில்லை

காற்று இலைகளோடு பேசும் மொழியைக் கற்றிருக்கவில்லை

சூரியக்கதிர்களின் சொஸ்தப்படுத்தும் சக்தியைத் தெரிந்திருக்கவில்லை

மலைகளின் நீண்ட கனத்த மெளனத்தைப் புரிந்திருக்கவில்லை

பற்றற்று விலகியவர்களின் ஒளிரும் முகங்களை தரிசிப்பதேயில்லை

அவர்கள் கடைசிவரை ஒத்துக் கொள்ள முயற்சிப்பதேயில்லை

வாழ்வின் சூத்திரங்கள் எதை நிறுவ முற்படுகின்றனவென்பதை!

Tuesday, July 27, 2010

துரோகத்தின் சுடு நிழல்கள்!



உனக்கும் எனக்குமிடையேயான விளையாட்டில் மேலுமொரு சீட்டுக்கட்டு கலைகிறது நம்மையுமறியாமல்!

இல்லையெனில் இவ்வளவு குழப்பங்கள் தரும் புதிர்களும், ஆயாசங்களும் திடீரென உன்னுள் நுழைந்திருக்குமா என்ன?

நமது பரஸ்பர புரிதல்களையும், விட்டுக் கொடுத்தல்களையும் நொடிகளில் நீ கடந்த காலமாக்கிவிட்டாய்!

உன் அர்த்தமற்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான என் கனத்த மெளனம் உன்னை ஆத்திரப்படுத்தியிருக்கக் கூடும் தான்

அதற்காக பின்புலங்களற்ற உன் எல்லா குற்றச்சாட்டுகளையும், அனுமானங்களையும் ஒரேடியாக ஏற்றுக் கொள்வதற்கில்லை

சில கணங்களில் என்னுள் சேகரமாயிருந்த சுடுசொற்களை மெல்ல மென்று பின் விழுங்கிக் கொண்டேன்

சாஸ்வதமான காலம் தரவிருக்கும் சொஸ்தப்படுத்துதல்கள் மட்டுமே இப்போதைக்கு அமைதி தருகின்றன

எனது அகவயமான காயக்கண்களை மீண்டும் மீண்டும் தீண்டத் துழாவுகின்றன விரிந்து நீளும் உன் அமில நாக்குகள்

சொற்களாவது பரவாயில்லை, நீ இன்றெனக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தின் துயர நிழல்களை எங்ஙனம் துடைப்பேன்?

உன்னை ஆசுவாசப்படுத்தவோ, நமதுறவின் அருமை விளக்க‌வோ எனக்கு நீ எந்த கால அவகாசமும் அளிக்கவேயில்லை

அதெல்லாம் இருக்கட்டும், நீ தொடரும் தவறுகளை எடுத்துணர்த்த உனக்கு ஒரு நண்பன் கூடவா இல்லாமல் போவான்?

பிற்பாடு உண்மையுணர்ந்து நீ என்னை சந்திக்க எத்தனிக்கையில் இயல்பாகச் சிரித்துத் துளிர்க்கும் நமதுறவு!

இது மற்றுமோர் காதல் கவிதையல்ல!



நான் எதிர்பாராத்தன்மையை நேசிப்பவன் தான்; ஆனால் இம்மாதிரியான தாக்குதலையல்ல‌

நீ காதலை தெரிவித்த கணம் ஒரு கனத்த அமைதிக்குப் பிறகானதாக இருந்திருக்கலாம்

மற்றபடி காதல் தெரிவிக்கப்பட்ட விதம் மிகக் கெளரவமானதாகவே இருந்தது

பிறகு தான் கவனித்தேன், உன் ஆடைகளிலும் சிகையலங்காரத்திலும் இன்றிருந்த மாற்றத்தை!

எப்போதும் போலல்லாமல் இன்று நீ எனக்கென எந்த கால அவகாசமும் தரவில்லை

'இந்த மூக்குக் கண்ணாடி உனக்கு பொருத்தமானதாக இல்லை’ என்கிறாய் சிறிதும் சலனமின்றி

தெரிவித்தலை தொடர்ந்த உனது சுவாரஸ்யப் பேச்சில் திக்கற்று திகைக்கின்றேன் நான்

வளர்பிறை தோன்றும் இம்மாலைப்பொழுது நீ தேர்ந்தெடுத்ததா?, இல்லை இயல்பாக அமைந்துவிட்ட ஒன்றா?

நமது நட்பு குறித்து பிற்பாடு எழப்போகும் கேலிக‌ளைப் பற்றி இப்போது வருந்துவதற்கில்லை

வாடிக்கையான‌ நண்பனின் வருகை இன்று மட்டும் ஏனோ குற்றவுணர்வை தோற்றுவிக்கிறது

பிறர் அறிந்துவிடாமலிருக்க நான் மேற்கொள்ளும் கவனங்களில் என் உடல் மொழி இயல்பிழக்கிறது

நேரம் தேய்ந்து கொண்டிருக்கிறது; முதலில் இந்த மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டும்!

மறுக்கப்பட்ட காதலென்று எதுவும் உண்டா என்ன? அதுவும் ஒரு பெண் சொல்லி!

நாளை நாம் சந்திக்கப்போகும் அக்கணங்கள் மீண்டும் மீண்டும் என் நினைவிலாடுகின்றன‌

இப்போதைய எனது கவலையெல்லாம் முடிவின்றி நீளப் போகும் இவ்விரவைப் பற்றியதுதான்!