
பிரபஞ்சம் மட்டுமே புதிரா? பிற பஞ்சங்கள் புதிரல்லவா?
தீர்வுகள் காண வழியுண்டு பஞ்சப் புதிர்களுக்கு, விழைவில்லை நமக்கதற்கு
ஒரு புள்ளியில் செறிந்து நொடிகளில் பல்கிப் பெருகியதாம் பிரபஞ்சம்
காட்சி பிம்பம் பலதந்தும் அண்டம், பேரண்டம் ஒரே சமயம் விரிக்காதோ நம் விழிகள்?
எரிமீன்கள் பல எறிந்து பால் வீதி வழிகடந்து –
பூமித்தாய் தூண்டில் சேர்வானவன், எரிபாலகனாம்!
மேற்கில் புதைத்து கிழக்கில் கிளப்பும் வாடிக்கை உட்பட அனைத்துமே வித்தைகள்தான்
வித்தைகள் பயிலும் வித்தகர்கள் உணர்ந்திட்டனரோ சாத்திரத்தின் சூட்சுமமதை?
ஆரமிட்டு ஆராய்ந்து சூட்சுமத்தின் சாளரங்கள் திறந்திடுமா நம் கலன்கள்
சுயம்பாய் திரியும் கேள்விகளைப் போல் இயற்கை நடத்தும் வேள்விகளும் விரிகிறது
ஆம், பிரபஞ்சம் ஒரு புதிர்தான்...
அது நாம் நெருங்க இயலா ஒரு வெப்பப் புதிர்!
No comments:
Post a Comment