Friday, November 7, 2008

கடவுள் இருக்கிறார்…!


“நாலரை - ஆறு நடை சாத்திடுவாங்க” - ரெண்டு ரூவா சீட்டு, அர்ச்சனைத்தட்டுடன் சில அவசர நடைகள்

“ஸ்பெஷல் தரிசனம் பதினஞ்சாம்!” - சலித்தபடி சவுக்குத் தடுப்பில் மஞ்சள் பை மாட்டினான் மொட்டைத்தலை

மீசை துடைத்து மணிக்கட்டு பார்த்த‌ கருத்தஉதட்டு கட்சி கரைவேஷ்டிக்கு யார் சிபாரிசிலோ ‘க்ளோஸ் – அப்’ காட்சி

மூட்டுவலி த‌ன் மூப்பின் சொத்தாகிப் போன ‘பாம்பட’ கிழவிக்கு முப்பது நிமிட‌ புண்ணிய‌ தரிசன காத்திருப்பு

சீட்டு சரிபார்த்தும் – பார்க்காமலும், மந்திரம் சொல்லியும் - சொல்லாமலும் நாழிக்கொரு தீப ஆராதனை

அரைத் தேங்காயானாலும் கொடுத்த தட்டே திரும்ப வந்ததில் பெருத்த சந்தோஷம் ‘பட்டுப்புடவை’ பெரியம்மாவுக்கு

பிரதோஷ பலன் வேண்டி, நந்தியின் ஒரு காது மறைத்து மறு காதில் குறை கொட்டினாள் ‘பிளாஸ்டிக் வளையல்’ புள்ளத்தாச்சி

“... திவ்ய‌தரிசனம் கண்டு பல‌ன் பெருவீர்!” - திருவிழாவையொட்டி கூட்டத்திடம் கூவி சொன்னது போஸ்டர் தட்டி

பிரகார வெளிச்சுவரின் தென்மேற்கு மூலையில் காரை பெயர்த்து கம்பீரம் கொண்டிருந்தது ஆறு அங்குல‌ ஆலஞ்செடி

“…செவுத்துல நெறைய தப்புமொளைங்க, வேர்ல ஆசிட் ஊத்த சொன்னதா நம்ம ஆறுமுக‌ங்கிட்ட மறக்காம சொல்லிடு…” -

தப்பு முளை த‌ன் கண்ணில் பட்ட கணம், செல்ஃபோனில் அதிகார அதட்டல் விடுத்தார் ஊர்த்தலையாரி

சரபேஸ்வரர் சந்நிதி சுவரில் ‘அவசரக்கடன்’ கழித்த காகமொன்று ப‌ட‌ப‌ட‌த்து பறந்த‌து வடகிழக்கு நோக்கி

‘சுர்’ரென்று சுட்ட வெயில் சுணக்கம் காட்ட, கருமேகக்‌ கண்டன‌ங்காட்டி கடுகடுத்து கரைந்தது ச‌னிமூலை

ரெண்டு நாள் கழித்து ஆறஅமர ஆறுமுகம் ஆசிட் ஊற்றுகையில், ந‌னைந்து நைந்திருந்த‌ன போஸ்ட‌ர் த‌ட்டிக‌ள்!

2 comments: